கருணை துப்பறியும் திறன் நகைச்சுவை வெள்ளை அங்கியின் மூன்று முகங்கள்!

by admin-blog-kh | July 1, 2026 5:08 am

ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம். வெள்ளை அங்கிக்குப் பின்னால் இருப்பவர் ஒரு கருணைமிக்க மனிதர்; கூர்மையான துப்பறிவாளர்; சிரிப்பைப் பகிரும் நண்பர். மருத்துவரை வெறும் ஹீரோவாக அல்ல, உணர்வுள்ள மனிதராகப் பார்க்கத் தொடங்கினால், மருத்துவர் நோயாளி உறவு இன்னும் வலுப்படும்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 அன்று கொண்டாடப்படும் தேசிய மருத்துவர்கள் தினம்[1], வெறும் நன்றியறிதல் நாள் மட்டுமல்ல; வெள்ளை அங்கிக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நாளும்கூட. மருத்துவர் என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது உயிரைக் காப்பவர் என்கிற பிம்பம்தான். ஆனால், அந்தப் பிம்பத்துக்குள் அன்பான மனிதர், கூர்மையான துப்பறிவாளர், சிரிப்பைப் பகிரும் நண்பர் என்று பல முகங்கள் மறைந்திருக்கின்றன.

ஒரு நோயாளி குணமடைந்து வீடு திரும்பும்போது மருத்துவரின் முகத்தில் மலரும் புன்னகையை நாம் காண்கிறோம். ஆனால், காப்பாற்ற முடியாமல் போன ஓர் உயிரின் வேதனையை அவர் மனதில் சுமந்து செல்லும் தருணங்களை நாம் அரிதாகவே உணர்கிறோம். மருத்துவம் என்பது வெறும் தொழில் அல்ல; அது உணர்வுகளின் பயணம். மருத்துவர்களும் பெற்றோராக, மகனாக, மகளாக, கணவராக, மனைவியாக, நண்பராக நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.

பல மணி நேரப் பணிச்சுமை, அவசர அழைப்புகள், உயிரிழப்புகள், நோயாளிகளின் துயரம் ஆகியவை அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ‘எனக்கு மறக்க முடியாத நோயாளி, நன்றி சொல்லி என் கையில் ஒரு சிறிய கையெழுத்துக் கடிதம் கொடுத்த சிறுவன்தான்’ என்று ஒரு மருத்துவர் கூறியதுண்டு. அந்த ஒரே நன்றி, பல இரவுகளின் சோர்வை மறக்கச் செய்துவிட்டது. மருத்துவர்களை ‘அதிசய மனிதர்கள்’ என்று பார்ப்பதைவிட ‘மனிதர்கள்’ என்று பார்க்கத் தொடங்கினால், அந்த உறவு இன்னும் வலுப்படும். ஏனெனில், மருத்துவர்களைக் கவனிப்பதும் மருத்துவத்தையே பாதுகாப்பதுதான்.

மருத்துவர்களை ‘நவீன காலத்து ஷெர்லாக் ஹோம்ஸ்கள்’ என்றால் அது மிகையல்ல. ஒவ்வோர் அறிகுறியும் ஒரு தடயம்; ஒவ்வொரு நோயாளியும் ஒரு புதிர். ‘சின்ன தலைவலி’ என்று வருபவரிடம் மருத்துவர் கேட்கும் கேள்விகள், மறைந்திருக்கும் பெரிய பிரச்னையை வெளிக்கொணரலாம். ‘சாதாரண இருமல்’ என்று நினைத்தது நுரையீரல் நோயாக இருக்கலாம்; ‘அஜீரணம்’ என்று கருதிய நெஞ்சுவலி இதய நோயின் எச்சரிக்கையாக இருக்கலாம்[2].

மருத்துவரின் ஸ்டெதஸ்கோப் ஒரு பூதக்கண்ணாடி; நோயாளியின் மருத்துவ வரலாறு சாட்சிய வாக்குமூலம்; பரிசோதனைகள் தடயவியல் ஆதாரங்கள்; சாத்தியமான நோய்களின் பட்டியல் சந்தேக நபர்களின் பட்டியல்; சிகிச்சைத் திட்டம் என்பது வழக்கை வெற்றிகரமாக முடித்தல். சிறந்த மருத்துவர் என்பவர் அதிகம் பேசுபவர் அல்ல; அதிகம் கேட்பவர். ஏனெனில், மருத்துவத்தில் சரியான கேள்விகளே சரியான பதில்களுக்கு வழிகாட்டுகின்றன.

மருத்துவமனையின் அன்றாட வாழ்க்கை ஒரு காமிக் புத்தகம் போல்தான். ‘இன்று அமைதியான நாளாக இருக்கும்’ என்று காலையில் சொல்வது ஒரு சாபம் என்பதை ஒவ்வொரு மருத்துவரும் அறிவார். ‘டாக்டர், என் அறிகுறிகளைக் கூகுளில் பார்த்தேன்’ என்கிறார் ஒரு நோயாளி. ‘அப்படியா? இன்று இணையம் உங்களுக்கு என்ன நோயை வழங்கியது?’ என்று கேட்க, ‘மூன்று அரிய நோய்களும், ஒரு வேற்றுகிரக ஒட்டுண்ணியும்!’ என்பது பதில். மதியம் ‘இப்போதுதான் சாப்பிட அமர்ந்தேன்’ என்றால் அவசர சிகிச்சைப் பிரிவு ‘அது ரொம்ப அழகான கனவு!’ என்கிறது. இரவு ‘இன்று நான் காபி குடித்தேனா?’ என்று மருத்துவர் கேட்க, ‘டாக்டர், உங்கள் கையில் இருப்பது மூன்றாவது கப்!’ என்கிறார் செவிலியர். இந்த நகைச்சுவைகள் வெறும் சிரிப்புக்காக அல்ல; அவை மனஅழுத்தத்தைக் குறைக்கின்றன[3], குழுவினரிடையே ஒற்றுமையை வளர்க்கின்றன, கடினமான தருணங்களிலும் நம்பிக்கையை உயிர்ப்பிக்கின்றன. மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரைப்பதில்லை; சில நேரங்களில் ஆறுதலையும் நம்பிக்கையையும், சரியான நேரத்தில் ஒரு புன்னகையையும் பரிந்துரைக்கிறார்கள்.

இந்தத் தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களை வெறும் ஹீரோக்களாக அல்ல; உணர்வுகள் கொண்ட மனிதர்களாகவும், புதிர்களைத் தீர்க்கும் துப்பறிவாளர்களாகவும், சிரிப்பின் வழியே உயிர்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்களாகவும் கொண்டாடுவோம். கருணையால் குணப்படுத்தி, அறிவால் புதிர்களை அவிழ்த்து, புன்னகையால் நம்பிக்கையூட்டும் அனைத்து மருத்துவர்களுக்கும் இதயம் கனிந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!

 

ஏன் ஜூலை 1?

தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1 அன்று கொண்டாடப்படுவதற்குப் பின்னால் ஒரு மாமனிதரின் நினைவு உள்ளது. புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராய் (Dr. B.C. Roy) பிறந்ததும் ஜூலை 1; மறைந்ததும் ஜூலை 1. மருத்துவத் துறைக்கும் சமூகத்துக்கும் அவர் ஆற்றிய அரும்பணியைப் போற்றி, அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அவரது நினைவாக, 1991-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

Dr. வெங்கிட்டா எஸ். சுரேஷ்
குழும மருத்துவ இயக்குநர்
காவேரி மருத்துவமனை[4]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 அன்று கொண்டாடப்படும் தேசிய மருத்துவர்கள் தினம்: https://youtu.be/dwavI26P8dk?si=tK3Ikt2e04rTut8g
  2. இதய நோயின் எச்சரிக்கையாக இருக்கலாம்: https://www.kauveryhospital.com/blog/heart-health/heart-diseases-and-symptoms-a-mini-reference-guide/
  3. மனஅழுத்தத்தைக் குறைக்கின்றன: https://www.kauveryhospital.com/blog/endocrinology/stress-hormone-and-its-effects/
  4. காவேரி மருத்துவமனை: https://www.kauveryhospital.com/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/compassion-investigative-skill-and-humor-the-three-facets-of-the-white-coat/