நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என்பது மூச்சுக் குழாய்கள் குறுகி, வீக்கம் அடைந்து, மூச்சு விடுவதைக் கடினமாக்கும் நீண்ட கால நுரையீரல் பாதிப்பு. புகைப்பிடித்தல் மட்டுமல்ல… உள்ளரங்க காற்று மாசுபாடு, தொழில்சார் தூசு வெளிப்பாடு, வெளிப்புற மாசுபாடு ஆகியவையும் முக்கிய காரணங்கள். முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சையால் நோய் முற்றுவதைத் தடுக்கலாம்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease – COPD) என்பது உலகளவில் மூன்றாவது முக்கிய இறப்புக் காரணம். இந்தியாவில் மட்டும் சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. பலர் ஆரம்பகட்ட அறிகுறிகளை ‘வயதாகிவிட்டதால் வரும் இயல்பான மாற்றம்’ என்று நினைத்து புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால் நோய் கண்டறியப்படும்போது ஏற்கனவே கணிசமான நுரையீரல் சேதம் ஏற்பட்டிருக்கும்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) என்பது நீண்ட கால நுரையீரல் பாதிப்பு என்று டாக்டர் பெலிண்டா அனெட் விளக்குகிறார். ‘‘இந்த நோயில், மூச்சுக் குழாய்கள் குறுகிப்போகின்றன, வீக்கம் அடைகின்றன, இதனால் மூச்சு விடுவது கடினமாகிறது. COPD என்பது உண்மையில் இரண்டு முக்கிய நிலைகளை உள்ளடக்கியது – நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (chronic bronchitis) மற்றும் எம்பிசிமா (emphysema)’’ என்கிறார் மருத்துவர்.
நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி என்றால் என்ன?
‘‘இது நீண்ட கால இருமலுடன், சளி வெளியேறுதல் கொண்ட நிலை. மூச்சுக்குழாய்களின் உட்சுவரில் வீக்கம் ஏற்பட்டு, அதிக சளி உற்பத்தியாகி, மூச்சுப் பாதையை அடைத்துவிடும். இதனால் தொடர்ச்சியான இருமல் மற்றும் சளி வெளியேற்றம் இருக்கும்’’ என்று விவரிக்கிறார் டாக்டர் பெலிண்டா அனெட்.
எம்பிசிமா என்பது என்ன?
‘‘இதில் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் (alveoli) சேதமடைகின்றன. இந்தக் காற்றுப் பைகள்தாம் ஆக்சிஜனை ரத்தத்தில் கலக்க உதவுகின்றன. இவை சேதமடையும்போது, மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும், குறிப்பாக உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பின்போது…’’ என்கிறார் மருத்துவர்.
COPD, ஆஸ்துமா – வித்தியாசம் என்ன?
பலருக்கும் COPD, ஆஸ்துமா – இரண்டும் ஒன்றுதான் என்கிற தவறான எண்ணம் உள்ளது. ‘‘இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட நிலைகள். ஆஸ்துமாவில் மூச்சுக் குழாய்கள் குறுகுதல் நிலையானது தலைகீழாக மாற்றக்கூடியது (reversible). இன்ஹேலர் மருந்துகள் பயன்படுத்தினால், அறிகுறிகள் முழுமையாக நீங்கிவிடும். COPD-ல், மூச்சுக்குழாய்கள் மற்றும் நுரையீரலுக்கு ஏற்படும் சேதம் பெரும்பாலும் நிரந்தரமானது. அது தலைகீழாக மாற்ற முடியாதது (largely irreversible). சிகிச்சையால் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை முழுமையாக சரிசெய்ய முடியாது’’ என்று தெளிவுபடுத்துகிறார் டாக்டர் பெலிண்டா அனெட்.
‘‘COPD-ஐ முற்றிய நோய் என்று அழைப்பதற்குக் காரணம், இது காலப்போக்கில் படிப்படியாக மோசமடைவதுதான். சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் நோய் முற்றுவதை மெதுவாக்கலாம், ஆனால், முற்றிலும் நிறுத்த முடியாது. ஆரம்பத்தில் லேசான மூச்சுத் திணறலாக இருந்தது, சிகிச்சை எடுக்காவிட்டால் படிப்படியாக அதிகரித்து, கடைசியில் சாதாரண நடைபயிற்சிகூட கடினமாகிவிடும். இதனால்தான் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது மிக முக்கியம்’’ என்று வலியுறுத்துகிறார் மருத்துவர்.
புகைப்பிடித்தல் COPD-க்கான முன்னணி காரணம் என்றாலும், இந்தியாவில் தனித்துவமான மற்ற பல ஆபத்துக் காரணிகளும் உள்ளன என்கிறார் டாக்டர் பெலிண்டா அனெட்.
உள்ளரங்க காற்று மாசுபாடு (Indoor Air Pollution)
‘‘இந்தியாவில், குறிப்பாக – கிராமப்புறங்களில், விறகு, சாணம், நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களைச் (biomass fuels) சமையலுக்குப் பயன்படுத்துவது மிகப் பெரிய பிரச்னை. போதிய காற்றோட்டம் இல்லாத சமையலறைகளில் இந்த எரிபொருட்களை எரிக்கும்போது வெளியாகும் புகை மிகவும் ஆபத்தானது. இதில் நச்சுத்தன்மை கொண்ட பல துகள்கள் மற்றும் வாயுக்கள் உள்ளன. தினமும் இந்தப் புகையை சுவாசிப்பது நுரையீரலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது’’ என்று விளக்குகிறார் மருத்துவர்.
இதனால் கிராமப்புறப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ‘‘புகைப்பிடிக்காத கிராமப்புற பெண்கள்கூட COPD-யில் பாதிக்கப்படுவதற்கு இதுதான் முக்கிய காரணம். தினமும் பல மணி நேரம் சமையல் புகையை சுவாசிப்பது, பல ஆண்டுகளாகத் தொடரும்போது, சிகரெட் புகைப்பிடிப்பதைப் போலவே நுரையீரல் சேதத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார் டாக்டர் பெலிண்டா அனெட்.
வெளிப்புறக் காற்று மாசுபாடு
‘‘நகரங்களில் வாகனப் புகை, தொழிற்சாலை புகை, கட்டுமானத் தூசு ஆகியவை காற்றை மாசுபடுத்துகின்றன. தினமும் இந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது நுரையீரலைப் படிப்படியாக பாதிக்கிறது. டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபாடு மிக அதிகமாக உள்ளது. இதனால் COPD நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது’’ என்று கவலை தெரிவிக்கிறார் மருத்துவர்.
தொழில்சார் வெளிப்பாடு (Occupational Exposure)
‘‘கட்டுமானத் தொழில், சுரங்கம், நெசவுத் தொழில், விவசாயம் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் தூசு, ரசாயனங்கள், புகை போன்றவற்றுக்கு தினமும் வெளிப்படுகிறார்கள். பாதுகாப்பு முகமூடி அணியாமல் இந்தச் சூழலில் வேலை செய்வது மிக ஆபத்தானது. சிமெண்ட் தூசு, நிலக்கரி தூசு, பருத்தி நார் தூசு, பூச்சிக்கொல்லி வாயுக்கள் – இவை அனைத்தும் நுரையீரலை நேரடியாகச் சேதப்படுத்துகின்றன’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் பெலிண்டா அனெட்.
மற்ற காரணங்கள்
‘‘மறைமுக புகைபிடித்தல் (passive smoking) அல்லது பிறரின் சிகரெட் புகையை சுவாசிப்பதும் COPD-க்கு வழிவகுக்கும். குழந்தைப் பருவத்தில் அடிக்கடி சுவாசத் தொற்றுகள் ஏற்பட்டால், வளர்ந்த பின் COPD வருவதற்கான அபாயம் அதிகம். சில மரபணுக் காரணிகளும் (genetic factors) இருக்கலாம். ஆனால், அது மிகவும் அரிதானது’’ என்று தெரிவிக்கிறார் மருத்துவர்.
Dr. பெலிண்டா அனெட் MBBS, MD, DNB நுரையீரல் மருத்துவ நிபுணர் காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011