நீரிழிவு முழுமையான தீர்வுகளும் நவீன சிகிச்சைகளும்

நீரிழிவு முழுமையான தீர்வுகளும் நவீன சிகிச்சைகளும்
November 27 05:19 2025 Print This Article

இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவுக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். ஆனால், சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் இந்த நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய புள்ளிவிவரப்படி, நமது நாட்டில் நீரிழிவுக் குறைபாட்டின் பரவல் அதிர்ச்சியளிக்கும் அளவில் அதிகரித்துள்ளது. பத்து கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பதிமூன்று கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சென்னை காவேரி மருத்துவமனையின் மூத்த நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கே.பரணீதரன் கூறுகையில், ‘‘நீரிழிவு என்பது வெறும் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மட்டுமல்ல. இது முழு உடலையும் பாதிக்கக்கூடிய ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு. ஆனால், சரியான புரிதலும் முறையான சிகிச்சையும் இருந்தால், இந்த நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்’’ என்கிறார்.

இந்தியர்களுக்கு ஏன் நீரிழிவு அதிகம்

இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் அதிகமாக வருவதற்கு ‘மெல்லிய-கொழுப்பு இந்தியன்’ (Thin-Fat Indian) என்கிற தனித்துவமான உடல் அமைப்பே காரணம். பார்ப்பதற்கு மெலிந்து காணப்படும் பலருக்கு உடலின் உள்ளுறுப்புகளைச் சுற்றி அதிக கொழுப்பு படிந்திருக்கும். இந்த உள்ளுறுப்பு கொழுப்பு (Visceral Fat) கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுற்றி படிந்து இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை உருவாக்குகிறது.

நமது பாரம்பரிய உணவு முறையில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் மாவுச்சத்து நிறைந்தவை. ஒரு சாதாரண தமிழ் உணவில் அறுபது முதல் எண்பது சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் இருக்கிறது. இது நீரிழிவுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறையும் ஒரு முக்கிய காரணம். தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. கணினி முன் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வது, வீட்டில் டிவி பார்த்துக்கொண்டே இருப்பது, எல்லா வேலைக்கும் இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துவது என உடல் செயல்பாடு மிகவும் குறைந்துவிட்டது.

மன அழுத்தமும் நீரிழிவுக்கு முக்கியக் காரணம். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை உயர்த்துகிறது.

நீரிழிவின் வகைகளும் அறிகுறிகளும் 

நீரிழிவு நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. முதல் வகை நீரிழிவு (Type 1 Diabetes) என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழித்துவிடும் நிலை. இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வரும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி செலுத்திக்கொள்வது அவசியம். இந்தியாவில் பத்து சதவிகித நீரிழிவு நோயாளிகள் மட்டுமே இந்த வகையைச் சார்ந்தவர்கள்.

இரண்டாம் வகை நீரிழிவுதான் (Type 2 Diabetes)தொண்ணூறு சதவிகித நோயாளிகளைப் பாதிக்கிறது. இதில் கணையம் இன்சுலின் உற்பத்தி செய்தாலும், உடல் செல்கள் அதை சரியாகப் பயன்படுத்துவதில்லை. இதையே இன்சுலின் எதிர்ப்புத் தன்மை என்கிறோம். ஒரு பூட்டில் சாவி சரியாக வேலை செய்யாதது போல, இன்சுலின் என்கிற சாவி செல்களின் பூட்டைத் திறக்க முடியாமல் தவிக்கிறது.

நீரிழிவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை அறிந்துகொள்வது மிக முக்கியம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், அதிக அளவு பசி, திடீரென உடல் எடை குறைவது, தொடர் சோர்வு, காயங்கள் ஆறுவதில் தாமதம், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது போன்றவை முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

நீரிழிவின் சிக்கல்கள் 

கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். இது அடிப்படையில் ஒரு ரத்த நாளக் கோளாறு. சிறிய ரத்த நாளங்களும் பெரிய ரத்த நாளங்களும் பாதிக்கப்படுகின்றன.

சிறிய ரத்த நாளப் பாதிப்புகளில் கண்களில் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு முக்கியமானது. இந்தியாவில் பார்வை இழப்புக்கு முக்கிய காரணம் நீரிழிவு விழித்திரைப் பாதிப்புதான். ஆனால், ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்தால் பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.

சிறுநீரகப் பாதிப்பு மற்றொரு முக்கிய சிக்கல். சிறுநீரில் புரதம் கசிவது ஆரம்ப அறிகுறி. சரியான சிகிச்சை இல்லாவிட்டால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நரம்புப் பாதிப்பால் கால்களில் எரிச்சல், வலி, மரத்துப்போதல் போன்றவை ஏற்படும்.

பெரிய ரத்த நாளப் பாதிப்புகளில் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் முக்கியமானவை. நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு வரும் அபாயம் இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகம். மேலும் நரம்புப் பாதிப்பால் மாரடைப்பு வந்தாலும் வலி தெரியாமல் ‘அமைதியான மாரடைப்பு’ ஏற்படலாம்.

கால்களில் ரத்த ஓட்டம் குறைவதால் காயங்கள் ஆறாமல் புண்களாக மாறும். நரம்புப் பாதிப்பால் காயம் ஏற்பட்டதே தெரியாமல் இருக்கும். இது நீரிழிவு கால் பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது. சரியான கவனிப்பு இல்லாவிட்டால் காலை வெட்டி எடுக்கும் நிலை கூட ஏற்படலாம்.

நவீன சிகிச்சை முறைகள் 

நீரிழிவு சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய மருந்துகள் வெறும் ரத்த சர்க்கரையைக் குறைப்பதோடு, இதயம் மற்றும் சிறுநீரகத்துக்குப் பாதுகாப்பும் அளிக்கின்றன. உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு கருவி (Continuous Glucose Monitor) ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம். சிறிய சென்சார் ஒன்று தோலில் ஒட்டப்பட்டு, தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவை கண்காணித்து மொபைல் போனுக்கு தகவல் அனுப்புகிறது. நோயாளி, மருத்துவர், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் எந்நேரமும் சர்க்கரை அளவை அறிய முடியும். இதனால் ‘துல்லிய நீரிழிவு கவனிப்பு’ சாத்தியமாகியுள்ளது.

இன்சுலின் பம்ப் மற்றொரு நவீன கருவி. இது தானாகவே தேவையான அளவு இன்சுலினை உடலுக்குச் செலுத்துகிறது. செயற்கையான கணையம் போல செயல்படும் இந்தக் கருவி முதல் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.

இந்த நவீன சிகிச்சைகள் இப்போது விலை குறைந்து நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படுத்தும் அளவுக்குக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி.

வாழ்க்கைமுறை மாற்றங்கள் 

நீரிழிவுக் கட்டுப்பாட்டில் மருந்துகளைவிட வாழ்க்கைமுறை மாற்றங்களே முக்கியம். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன அமைதி என மூன்று அடிப்படைத் தூண்களில் நீரிழிவு மேலாண்மை அமைந்துள்ளது.

உணவில் மாற்றம் செய்வது எளிது. ‘என் தட்டு என் பொறுப்பு’ என்கிற கொள்கையைப் பின்பற்ற வேண்டும். தட்டில் நாற்பது சதவிகிதம் காய்கறிகள், முப்பது சதவிகிதம் புரதம், முப்பது சதவிகிதம் மட்டுமே கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும். முதலில் காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சாப்பிடுங்கள். அடுத்து பருப்பு போன்ற புரத உணவுகள். கடைசியாக மட்டுமே சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடுங்கள். இது ரத்த சர்க்கரை திடீரென ஏறுவதைத் தடுக்கும்.

வெள்ளை உணவுகளைக் குறைக்க வேண்டும். அரிசி, மைதா, சர்க்கரை, பால் ஆகியவற்றைக் குறைத்து, கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை அதிகரிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு உடல் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரதம் தேவை. அறுபது கிலோ எடை உள்ளவர்களுக்கு அறுபது கிராம் புரதம் தேவை.

உடற்பயிற்சி மிக அவசியம். வாரத்தில் ஐந்து நாட்கள், நாளொன்றுக்கு முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் நூற்று ஐம்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும். ‘‘உடற்பயிற்சியில் அக்கறை – உனக்கில்லை சர்க்கரை!’’ என்கிற வாசகம் 100 சதவிகித உண்மை. தசை வலிமைக்கு எடை தூக்கும் பயிற்சிகளும் முக்கியம். தசைகள்தாம் குளுக்கோஸை அதிகம் பயன்படுத்தும் உறுப்புகள்.

மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா, பிராணாயாமம் போன்றவை உதவும். போதுமான தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் ஏழு மணி நேரத் தூக்கம் தேவை.

தவறான நம்பிக்கைகள் 

நீரிழிவு குறித்து பல தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன. மெட்ஃபார்மின் மருந்து சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பது முற்றிலும் தவறு. இது பாதுகாப்பான மருந்து. ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்பு இருந்தால் மட்டுமே அளவைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும்.

இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் போட வேண்டும் என்பதும் தவறு. அதிக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக இன்சுலின் பயன்படுத்தி, பின்பு மாத்திரைகளுக்கு மாறலாம். இன்சுலின் ஒரு சக்திவாய்ந்த கருவி, தோல்வியின் அறிகுறி அல்ல.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் நீரிழிவு வரும் என்பதும் தவறு. மெலிந்த உடல்வாகு உள்ளவர்களுக்கும் உள்ளுறுப்புக் கொழுப்பு அதிகமாக இருந்தால் நீரிழிவு வரலாம்.

நீரிழிவை மீட்டெடுக்க முடியும்

மிக முக்கியமான செய்தி என்னவென்றால், இரண்டாம் வகை நீரிழிவு நிரந்தர நோய் அல்ல. ஆரம்பக்கட்டத்தில், குறிப்பாக முதல் ஐந்து வருடங்களில் கண்டறியப்பட்டால், வாழ்க்கைமுறை மாற்றங்களால் நீரிழிவை மீட்டெடுக்க முடியும் (Diabetes Remission). இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் குறைத்து, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, மருந்துகள் இல்லாமலே சாதாரண வாழ்க்கை வாழ முடியும்.

இதற்கு கடுமையான ஒழுக்கமும் உறுதியும் தேவை. உணவுக் கட்டுப்பாடு, தொடர் உடற்பயிற்சி, மன அழுத்த நிவாரணம் ஆகிய மூன்றும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். பல நோயாளிகள் இதை வெற்றிகரமாகச் சாதித்துள்ளனர்.

டாக்டர் பரணீதரன் கூறுகையில், ‘‘நீரிழிவு ஒரு வாழ்க்கைமுறை நோய். வாழ்க்கைமுறையை மாற்றினால் நோயையும் மாற்ற முடியும். நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்’’ என்கிறார்.

நீரிழிவு நோய் ஒரு சவால்தான். ஆனால், வெல்ல முடியாத சவால் அல்ல. சரியான புரிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கைமுறை மாற்றங்கள் இவற்றுடன் நீரிழிவு நோயாளிகளும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்தாம் உள்ளது!

 

நீரிழிவுத் தடுப்புக்கான எளிய வழிமுறைகள்

நீரிழிவைத் தடுக்க எளிய – ஆனால் முக்கியமான சில வழிமுறைகள்

வருடாந்தரப் பரிசோதனை: இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும், குறிப்பாக குடும்ப வரலாறு உள்ளவர்கள், வருடத்துக்கு ஒருமுறை ரத்த சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். HbA1c பரிசோதனை மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைக் காட்டும்.

எடை கண்காணிப்பு: உடல் நிறை குறியீட்டை (BMI) இருபத்திமூன்றுக்குள் வைத்திருக்க வேண்டும். இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு தொண்ணூறு செ.மீ., பெண்களுக்கு எண்பது செ.மீ.க்குள் இருக்க வேண்டும்.

தூக்கத்தின் முக்கியத்துவம்: குறைந்த தூக்கம் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும். இரவு பதினொரு மணிக்கு முன் தூங்கச் செல்வதும், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதும் அவசியம்.

 

Dr. கே. பரணீதரன், MBBS, MD
நீரிழிவு சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801