தாய்ப்பாலை முன்னுரிமைப் படுத்துங்கள்… நிலையான ஆதரவு முறைகளை உருவாக்குங்கள்!

தாய்ப்பாலை முன்னுரிமைப் படுத்துங்கள்… நிலையான ஆதரவு  முறைகளை உருவாக்குங்கள்!
November 07 08:52 2025 Print This Article

தாய்ப்பால் என்பது வெறும் உணவல்ல… அது அன்பின் முதல் வெளிப்பாடு. ஆரோக்கியத்தின் அடித்தளம். தாய்-சேய் பிணைப்பின் இனிய தொடக்கம்!

தாய்ப்பால் என்பது குழந்தைக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல… அது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு கொடுக்கும் அற்புதமான மருந்து. உலக தாய்ப்பால் வாரத்தின் இந்த ஆண்டின் முழக்கம் ‘தாய்ப்பாலை முன்னுரிமைப்படுத்துங்கள்… நிலையான ஆதரவு முறைகளை உருவாக்குங்கள்!’ என்பதாகும். இது தாய் மற்றும் சுற்றுச்சூழல் நலனில் பங்கு வகிக்கும் தாய்மார்களுக்கு வலுவான மற்றும் நிலையான ஆதரவு முறைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

உலக தாய்ப்பால் வாரத்தின் முக்கியத்துவம் 

உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் தலைமையிலான உலகளாவிய தாய்ப்பால் கூட்டமைப்பு, குழந்தைகளிடையே முழுமையான தாய்ப்பால் கொடுக்கும் விகிதத்தை உலகளவில் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த ஆண்டின் இலக்கு 50 சதவிகிதமாகும். இந்த இலக்கை அடைய தாய்ப்பால் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதில் நிதியுதவி, குடும்ப விடுப்பு, பணியிட ஆதரவு மற்றும் தாய்ப்பால் ஆலோசனை ஆகியவை அடங்கும்.

தாய்மார்களுக்கான நவீன ஆதரவு வசதிகளில் பணியிடங்களில் தாய்ப்பால் கொடுக்கவும் பாலைச் சேமிக்கவும் தனி அறைகள், வணிக வளாகங்களில் செவிலியர் மையங்கள், பொது இடங்களில் பாலூட்டும் வசதிகள், பேருந்து மற்றும் ரயில்களில் தாய்மார்களுக்கான சிறப்பு இருக்கைகள் போன்றவை அடங்கும். டெலிலாக்டேஷன் மற்றும் 24/7 சாட்பாட்கள், ஏஐ உதவியுடன் இயங்கும் பால் சுரப்பு உதவி மையங்கள் போன்ற டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாய்ப்பாலின் உடனடி நன்மைகள் 

தாய்க்கான நன்மைகள் 

  • கருப்பை சுருங்க உதவுதல்: தாய்ப்பால் கொடுப்பது கருப்பை விரைவில் அதன் இயல்பான நிலைக்குத் திரும்ப உதவுகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.
  • தாய்குழந்தை பிணைப்பு: தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தைக்கிடையே வலுவான உணர்ச்சிப் பிணைப்பு உருவாகிறது. இது குழந்தையின் மனநலத்துக்கும் நல்லது.
  • இயற்கையான கருத்தடை: முழுமையான தாய்ப்பால் கொடுப்பது முதல் ஆறு மாதங்களுக்கு இயற்கையான கருத்தடை முறையாகச் செயல்படுகிறது. இது மாதவிடாய் நின்று, அண்டவிடுப்பு நிகழாமல் இருப்பதால் சாத்தியமாகிறது.
  • எடைக் கட்டுப்பாடு: தாய்ப்பால் சுரப்பதற்கு அதிக கலோரி தேவைப்படுவதால், பிரசவத்துக்குப் பிறகான எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
  • புற்றுநோய்த் தடுப்பு: மார்பகப் புற்றுநோயை 4 முதல் 6 சதவிகிதம் வரை தடுக்கிறது. கருப்பை மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
  • மகப்பேற்றுக்கு பிந்தைய மன அழுத்தம் தடுப்பு: தாய்ப்பால் கொடுப்பதால் சுரக்கும் ஹார்மோன்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகின்றன.

குழந்தைக்கான நன்மைகள் 

  • நோய் எதிர்ப்பு சக்தி: ஆறு மாதங்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் காது நோய்கள், சுவாசக் கோளாறுகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவது குறைவு.
  • ஒவ்வாமை மற்றும் உடல் பருமன் தடுப்பு: தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் உடல் பருமன் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • முறையான வளர்ச்சி: குழந்தையின் சரியான உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் உதவுகிறது.
  • மூளை வளர்ச்சி: தாய்ப்பாலில் உள்ள டிஹெச்ஏ மற்றும் பிற சத்துக்கள் மூளை வளர்ச்சியை ஆதரிக்கின்றன.
  • நீரிழிவு தடுப்பு: டைப் 2 நீரிழிவு வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • மருத்துவமனையில் அடிக்கடி சேர்க்கப்படுதல் குறைவு: தாய்ப்பால் குடித்த குழந்தைகள் மருத்துவமனையில் அடிக்கடி சேர்க்கப்படுவது குறைவு.
  • முன்கூட்டிப் பிறந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு: நெக்ரோடைசிங் என்டெரோகோலைட்டிஸ் போன்ற கடுமையான குடல் நோய்களைத் தடுக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் சவால்களும் தீர்வுகளும் 

பொதுவான சவால்கள் 

பால் சுரப்பு தாமதம், தாய் மற்றும் சுற்றத்தார்களின் மனநலப் பிரச்னைகள், மாஸ்டைடிஸ் எனும் மார்பகத் திசுக்களில் ஏற்படும் அழற்சி நோய், பால் குழாய் அடைப்பு, மார்பக வீக்கம், கேலக்டோசீல் எனும் பால் நிரம்பிய நீர்க்கட்டி, தட்டையான அல்லது வலியுடன் கூடிய காம்புகள், தாயின் சோர்வு மற்றும் குழந்தை  பால் குடிப்பதில் சிரமம் ஆகியவை முக்கிய சவால்கள்.

முன்கூட்டிப் பிறந்த குழந்தைகள், நுண்ணிய தாடை கொண்ட குழந்தைகள் அல்லது  நாக்கின் அடிப்பகுதியில் உள்ள திசுப்பட்டை (லிங்குவல் ஃப்ரீனுலம்) குறுகியதாக அல்லது இறுக்கமாக இருக்கும் நிலை இருந்தால் பால் குடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

தீர்வுகள் 

மருத்துவ ஆலோசனை மிக அவசியம். பிரச்னைகளைப் பொறுமையுடன் ஆராய்ந்து, அன்பு மற்றும் கவனிப்புடன் கையாள வேண்டும். தாய்மார்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய பகுதிகள் இவை…

  • ஆரம்பகால பாலூட்டல்: பிறந்த முதல் மணி நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்கும் முறைகள்
  • சருமத் தொடர்பு: தாய்-குழந்தை இடையே நேரடியாகச் சருமத் தொடர்பை ஊக்குவித்தல்
  • பாலூட்டும் நுட்பங்கள்: குழந்தை சரியாகப் பால் குடிக்கும் முறைகள்
  • பொதுவான பிரச்னைகள்: மார்பக வீக்கம், பால் சுரப்பு குறைவு போன்றவற்றுக்கான தீர்வுகள்
  • தாயின் உடல்நலம்: நோய் ஏற்பட்டால் பாலூட்டல் தொடர்பான வழிகாட்டுதல்

உயர் ஆபத்துள்ள கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் 

சிக்கலான கர்ப்பம் அல்லது பிரசவம் கொண்ட தாய்மார்களும் தாய்ப்பால் புகட்டுவது மிக முக்கியம். முதல் மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிப்பதும் மிக முக்கியம். அடிப்படை நோய் அல்லது மன அழுத்தம் காரணமாக பால் சுரப்பு தாமதமாகலாம்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் தாய்மார்களுக்கு வெளியே எடுத்த மார்பகப் பால் கொடுக்கலாம். நீரிழிவு உள்ள தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் ரத்த சர்க்கரை குறைவைத் தடுக்க ஆரம்பத்திலேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆரம்பகால சருமத்துக்குச் சருமம் பிணைப்பு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்போது சரியான நிலை மிக முக்கியம். தாய்-குழந்தை பிணைப்புக்கும் இது மிக முக்கியம்.

முன்கூட்டிப் பிறந்த குழந்தைகள் அல்லது என்.ஐ.சி.யுவில் உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வொரு 2-3 மணி நேரத்துக்கும் தாய்மார்கள் வெளியே எடுத்த மார்பகப் பால் அல்லது பம்ப் மூலம் பால் கொடுக்கலாம்.

பணியிடத்தில் உள்ள தாய்மார்களின் குழப்பம் 

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அலுவலகப் பொறுப்புகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தேவைக்கும் இடையே சமநிலை காண முயல்வதால் மன அழுத்தம் மற்றும் உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.நேரக் கட்டுப்பாடுகள், பணியிட வரம்புகள் மற்றும் சமூக அழுத்தம் ஆகியவை காரணமாக அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

சவால்கள் 

குறுகிய கால மகப்பேறு விடுப்பு, பணியிட ஆதரவின்மை, கடுமையான வேலை நேர அட்டவணைகள், விழிப்புணர்வு இல்லாமை, சமூக வெறுப்பு, உடல் மற்றும் மனச் சோர்வு ஆகியவை முக்கிய சவால்கள்.

தீர்வுகள் 

தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ற பணிச்சூழல் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். தாய்ப்பால் அறைகள் உருவாக்குதல் மற்றும் நெகிழ்வான பணி நேரங்கள் வழங்குதல், குடும்ப ஆதரவு, பால் சுரப்பு ஆலோசனை, மார்பகப் பால் சேமிப்பு மற்றும் சுகாதாரக் கல்வி ஆகியவை முக்கியம்.

மருத்துவ முரண்பாடுகள் 

சில மருத்துவ நிலைமைகளில் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் அதிக அளவு எச்.ஐ.வி வைரஸ் உள்ள தாய்மார்கள் மற்றும் செயலில் உள்ள காசநோய் பாதிப்பு கொண்ட தாய்மார்கள், ஹெபடைட்டிஸ் ஏ, பி அல்லது சி உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கேலக்டோசீமியா அல்லது அமினோ அமில வளர்சிதை மாற்றக் கோளாறுகள் (பிகேயு – ஃபினைல்கீட்டோனூரியா) உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

முன்கூட்டிப் பிறந்த குழந்தைகள் மற்றும் என்..சி.யு பராமரிப்பு 

குறைமாத குழந்தைகளின் உடலில் நோய்களை எதிர்க்கும் சக்தி குறைவாக இருப்பதால், செப்சிஸ், அசாதாரண குடல் பாக்டீரியா குடியேற்றம், ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் காயங்கள், நெக்ரோடைசிங் என்டெரோகோலைட்டிஸ் மற்றும் பிறந்த குழந்தையின் வளர்ச்சி மந்தநிலை ஆகியவற்றின் அபாயம் உள்ளது.

வெளியே எடுத்த அல்லது பம்ப் செய்த மார்பகப் பால் மேற்கண்ட அனைத்துப் பிரச்னைகளையும் தடுக்கிறது. மார்பகப் பாலை அதற்கேற்ப சேமித்து குழந்தைக்கு வழங்கலாம்.

தவறான கருத்துகள் மற்றும் மூடநம்பிக்கைகள் 

  • எண்ணம்: ‘அதிக பால் சுரப்புக்கு தாய் அதிக பால் குடிக்க வேண்டும்.’
  • உண்மை: இது உண்மையல்ல. நாளொன்றுக்கு கூடுதலாக 300-400 கலோரிகள் கொண்ட சமச்சீர் உணவு மற்றும் நிறைய திரவங்கள் போதுமானது.
  • எண்ணம்: ‘சிறிய மார்பகங்கள் போதுமான பால் சுரப்பு செய்யாது.’
  • உண்மை: இது உண்மையல்ல – மார்பகத்தின் அளவு முக்கியமல்ல.
  • எண்ணம்: ‘சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.’
  • உண்மை: இது உண்மையல்ல. அசைவ உணவு, கத்தரிக்காய், தேங்காய் போன்ற உணவுகள் குழந்தைக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது.
  • எண்ணம்: ‘கடந்த கர்ப்பத்தில் பால் சுரப்பு குறைவாக இருந்தால், அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை இருக்கும்.’
  • உண்மை: இது உண்மையல்ல. நம்பிக்கைதான் முக்கியம்.

தாய்ப்பால் மற்றும் எதிர்கால கருவுறுதல் 

முழுமையான தாய்ப்பால் கொடுப்பது ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, கருமுட்டை வெளியாவதைத்   தடுக்கிறது. இதன் விளைவாக பாலூட்டல் காலத்தில் மாதவிடாய் இல்லாமை (Lactational Amenorrhea) மற்றும் இயற்கையான கருத்தடை விளைவு உண்டாகிறது. இதனால் எதிர்கால கருவுறுதல் பாதிக்கப்படாது. கருவுறுதல் சிகிச்சைகள் அல்லது வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட பெண்களும் போதுமான பால் சுரப்பைப் பெற முடியும்.

நவீன தாய்ப்பால் பராமரிப்பு வழிகாட்டுதல்கள் 

பால் சுரப்பு அதிகரிக்க இயற்கை முறைகள்

  • வெந்தயம், சீரகம், பாதாம் உள்ளிட்ட இயற்கை உணவுகள்
  • போதுமான நீர்ச்சத்து மற்றும் ஓய்வு
  • தொடர்ந்து பால் கொடுப்பது அல்லது பம்ப் செய்தல்

பால் சேமிப்பு வழிமுறைகள்

  • அறை வெப்பநிலையில்: 4-6 மணி நேரம்
  • குளிர்சாதனப்பெட்டியில்: 4-5 நாட்கள்
  • ஃப்ரீசரில்: 6-12 மாதங்கள்

சரியான பால் குடிக்கும் நிலைகள்

  • குழந்தையின் உடல் முழுவதும் தாயை நோக்கி இருக்க வேண்டும்
  • குழந்தையின் மூக்கு மார்புக் காம்புக்கு எதிராக இருக்க வேண்டும்
  • குழந்தையின் வாய் பெரிதாகத் திறந்திருக்க வேண்டும்

எச்சரிக்கை அறிகுறிகள்

  • குழந்தையின் எடை குறைதல்
  • நாள் ஒன்றுக்கு 6 முறைகளுக்கும் குறைவாக சிறுநீர் கழித்தல்
  • கடுமையான மார்பக வலி அல்லது வீக்கம்
  • காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள்

தாய்ப்பால் உலக வாரம் 2025 நமக்கு நினைவூட்டுகிறது – தாய்ப்பால் என்பது வெறும் குழந்தையின் உணவல்ல, அது நமது சமூகத்தின் எதிர்காலத்துக்கான முதலீடு. சரியான அறிவு, ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு தாயும் வெற்றிகரமாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.

ஒவ்வொரு தாய்ப்பால் சொட்டும் ஒரு குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கான முதலீடு!

  • முதல் மணி நேரத்துக்குள் தாய்ப்பாலைத் தொடங்குங்கள்
  • குடும்ப ஆதரவு மிக முக்கியம்
  • முதல் 6 மாதங்கள் முழுமையான தாய்ப்பால் மட்டுமே
  • 2 வயது வரை தாய்ப்பாலைத் தொடருங்கள்
  • தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்

டாக்டர் பி. சத்யா சுதாகர்
MBBS, DGO, DRM (Germany)
மகப்பேறு மற்றும் பெண்கள் நலவியல் மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சேலம்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011