ஆரோக்கியமான வயோதிகம் என்பது என்ன?

ஆரோக்கியமான வயோதிகம் என்பது என்ன?
December 30 08:12 2025 Print This Article

முதுமை என்பது இயற்கையின் வரம். அதை சுமையாகக் கருதாமல், வாய்ப்பாக மாற்றுவது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்!

ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் சொன்னார்… ‘வயதான முகங்களில் எதிர்பாராத அழகு இருக்கிறது…’ இந்த வார்த்தைகளில் எவ்வளவு ஆழமான உண்மை இருக்கிறது! முதுமை என்பது ஓர் இயற்கையான பயணம். அது உடலிலும் மனத்திலும் மாற்றங்களைக் கொண்டுவரும். ஆனால், அதன் அர்த்தம் சுதந்திரம், கண்ணியம் அல்லது மகிழ்ச்சியை இழப்பது அல்ல!

உலகளவில் ஆறு பேரில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஒவ்வோர் ஆண்டும் வயதானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. 2050-க்குள் நம் நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை 34 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி நம் சமூகத்துக்குப் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டுவருகிறது.

ஆரோக்கியமான முதுமையின் அடிப்படைத் தூண்கள் 

  1. உடல் நல்வாழ்வு என்பது முதுமையின் முதல் தூண். வழக்கமான உடல் செயல்பாடுகள் – நடைப்பயிற்சி, யோகா, வலிமைப் பயிற்சி அல்லது நடனம் – இவை அனைத்தும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அவசியம். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த சீரான உணவு எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமை தருகிறது. மிக முக்கியமாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பார்வை அல்லது காது கேளாமை போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
  2. மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் இரண்டாவது தூண். வாசிப்பு, புதிர்கள், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அல்லது டிஜிட்டல் எழுத்தறிவு மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. தியானம், பிராணாயாமம் அல்லது தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்வது மனதுக்கு அமைதியைத் தரும். தனிமை மற்றும் மனச்சோர்வைக் குறைக்க சமூகத் தொடர்புகளை பராமரிப்பது அவசியம்.
  3. சமூக ஈடுபாடு மூன்றாவது தூண். சமூகக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு அல்லது கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்பது வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை உருவாக்குகிறது. சமூகத் தொடர்புகள் அதிகமாக உள்ளவர்கள் அதிக ஆயுளோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள் என முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்துவது – இளைய தலைமுறையினருடன் கதைகள் மற்றும் ஞானத்தைப் பகிர்ந்து கொள்வது – மிகவும் முக்கியம்.
  1. பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் – நான்காவது தூண். வீட்டில் விழுந்து விடும் அபாயங்களை நீக்குவது மிக அவசியம். குளியலறையில் பிடிப்புக் கம்பிகள், படிக்கட்டுகளில் கைப்பிடிகள், நல்ல விளக்கு வசதிகள் போன்றவை அமைக்கப்பட வேண்டும். தேவையான உதவி சாதனங்களை (கண்ணாடிகள், கேட்கும் கருவிகள், நடைப்பயிற்சி குச்சிகள் போன்றவை) நம்பிக்கையுடன் பயன்படுத்த தயங்கவோ, கூச்சப்படவோ வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்.
  2. நோக்கம் மற்றும் பொருள் – ஐந்தாவது தூண். பணி ஓய்வு என்பது ஒரு முடிவல்ல… அது ஒரு தொடக்கமாகவும் இருக்கலாம். பொழுதுபோக்குகளைத் தொடர்வது, ஆன்மிகத்தை ஆராய்வது, மற்றவர்களுக்கு வழிகாட்டுவது அல்லது சமூக பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்பாடுகள் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை உருவாக்குகின்றன.

தவறான நம்பிக்கைகளை உடைப்போம்

வயதானால் கண்டிப்பாக உடல் நலக் குறைவோ, ஊனமுற்ற நிலையோ வரும்???

உண்மை: வயதானவர்கள் பலர் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் சுயமாகவும் வாழ்கிறார்கள். உடற்பயிற்சி, சத்தான உணவு, தடுப்பு சிகிச்சை, சமூகப் பங்கேற்பு ஆகியவை நல்ல உடல்-மனம் நலனைப் பாதுகாக்க உதவுகின்றன.

வயது வந்தால் நினைவிழப்பு தவிர்க்க முடியாது???

உண்மை: சிறிய மறதிகள் இயல்பானவை, ஆனால், கடுமையான நினைவிழப்பு ஏற்படுவது இயல்பான முதுமை அல்ல. சுறுசுறுப்பான மனப்பயிற்சி, சமூகத் தொடர்புகள், ரத்த அழுத்தம்

மற்றும் நீரிழிவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

வயதானவர்கள் புதிய விஷயங்களைக் கற்க முடியாது???

உண்மை: மூளை வாழ்நாள் முழுவதும் புதிய தொடர்புகளை உருவாக்கும் திறன்கொண்டது.     வயதானவர்கள் புதிய திறன்கள், தொழில்நுட்பம், கலை, பொழுதுபோக்கு ஆகியவற்றை வெற்றிகரமாக கற்றுக்கொள்ள முடியும்.

முதுமை வந்தால் தனிமையைத் தவிர்க்க முடியாது???

உண்மை: வயதானவர்கள் பலர் குடும்பம், நண்பர்கள், சமூக அமைப்புகள் மூலம் உறவுகளைப் பராமரித்து, நிறைவான சமூக வாழ்க்கை நடத்துகிறார்கள். புதிய உறவுகள், குறிப்பாக இளம் தலைமுறையுடன் தொடர்பு, தனிமையைத் தடுக்கும்.

உடற்பயிற்சி என்பது வயதானவர்களுக்கு ஆபத்தானது??? –

உண்மை: உடற்பயிற்சிதான் முதியவர்களுக்கு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழி. சரியான வழிகாட்டுதலுடன் செய்யப்படும் பயிற்சி விழுதலைத் தடுக்கும், மனநிலையை மேம்படுத்தும், இதயம் மற்றும் எலும்புகளுக்கு வலிமை தரும். அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது: ‘முதியோர்களின் ஞானம், கண்ணியம் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்போம்.’

முதுமை என்பது வாழ்க்கையின் இறுதிப் பகுதி அல்ல – அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். அனுபவமும் ஞானமும் நிறைந்த இந்த அத்தியாயத்தை வண்ணமயமாக எழுதுவது நம் கையில்தான் இருக்கிறது.

 

முதியோர் நலம் காக்கும் 5 முக்கிய பரிசோதனைகள்

1. ரத்த அழுத்தப் பரிசோதனை – வருடத்துக்கு இருமுறை
2. ரத்த சர்க்கரை பரிசோதனை – வருடத்துக்கு ஒருமுறை
3. கண் பரிசோதனை – இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை
4. எலும்பு அடர்த்தி பரிசோதனை – 65 வயதுக்கு மேல் பெண்களுக்கு
5. புற்றுநோய் ஸ்க்ரீனிங் – மருத்துவர் ஆலோசனைப்படி

 

Dr. எஸ். லாவண்யா
MBBS, MD, FCPM
முதியோர் நல சிறப்பு மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனைதிருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011