குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்
February 17 11:15 2025 Print This Article

காய்ச்சல் என்பது பெற்றோர்களை அதிகம் கவலைப்பட வைக்கும் ஒன்று. ஆனால், காய்ச்சல் என்பது நோய் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அது நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (immune mechanism) சரியாக வேலை செய்வதன் அறிகுறி. அனைத்து வயது பிரிவினருக்கும் உடல் வெப்பநிலை 100.4°F-க்கு மேல் போனால்தான் காய்ச்சல். எனவே வீட்டில் தெர்மாமீட்டர் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

காய்ச்சலின் தன்மை மற்றும் காரணங்கள் 

நமக்கு வரும் காய்ச்சலில் 90% வைரஸ் காய்ச்சல் மட்டுமே. இவை பெரும்பாலும் 48 மணி நேரம் நீடிக்கும். வைரஸ் காய்ச்சலின் போது, மருந்து கொடுத்தால் கூட அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தான் குறையும், பின்னர் மீண்டும் உயரும். ஆகையால், 6 மணி நேரத்துக்கு
ஒரு முறை மருந்து தேவைப்படும். ஆனால், மூன்றாவது நாளில் காய்ச்சலின் தன்மை குறையத் தொடங்கும். முதலில் 102°F-க்கு மேல் இருந்த காய்ச்சல், குறைந்த அளவு காய்ச்சலாக (Low Grade Fever) மாறிவிடும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் பல காரணங்களால் வரலாம். காது, மூக்கு, தொண்டை நோய்த்தொற்று, நுரையீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மூளைக்காய்ச்சல், போன்றவற்றால் காய்ச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் காரணமே தெரியாமல் காய்ச்சல் தொடரலாம் – இதை மறைந்திருக்கும் நோய்த்தொற்று (Hidden Infection) என்கிறோம். இது வயிறு, கல்லீரல், மண்ணீரல் அல்லது இதயத்தில் உள்ள நோய்த்தொற்றால் ஏற்படலாம்.

காய்ச்சல் மருந்துகளின் பயன்பாடு 

காய்ச்சலுக்கு நாம் கொடுக்கின்ற மருந்து பாராசிட்டமால். இந்த மருந்தால் பெரிதாக பக்க விளைவுகள் இல்லை.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 முறை (6 மணி  நேர இடைவெளியில்) கொடுக்கலாம். ஆனால், மருந்தை சரியான இடைவெளியில் மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லையெனில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாராசிட்டமால் மருந்தை வாய் வழியாகவோ (சிரப்) அல்லது ஆசன வழியாகவோ கொடுக்கலாம். குறிப்பாக குழந்தை வாந்தி எடுக்கும்போது ஆசன வழியாகக் கொடுப்பது சிறந்தது.

ஒரு முக்கிய குறிப்பு… புதிதாக வாங்கிய மருந்தை ஒரு மாத காலத்துக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஃபிப்ரைல் சீஷர்ஸ் (Febrile Seizures) 

6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, காய்ச்சலின் முதல் நாளில் ஃபிப்ரைல் சீஷர்ஸ் ஏற்படலாம். இது 99°F முதல் 102°F வரை எந்த வெப்பநிலையிலும் ஏற்படலாம். கண் மேல்நோக்கி செல்வது, கை கால்கள் இழுப்பது போன்ற அறிகுறிகள் ஒரு நிமிடத்துக்குள் தானாகச் சரியாகிவிடும். ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் ஏற்பட்டால் மட்டும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

எச்சரிக்கை அறிகுறிகள்  

பின்வரும் நிலைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்…

  • மூன்றாவது நாளும் காய்ச்சல் அதிகமாக இருத்தல்
  • தண்ணீர் ஒழுங்காகக் குடிக்காமல் இருத்தல்
  • காய்ச்சல் இல்லாதபோதும் சோர்வாக இருத்தல்
  • சிறுநீர் சரியாகக் கழிக்காமல் இருத்தல்
  • தொடர்ந்து வாந்தி
  • மூச்சு விடுவதில் சிரமம்

தடுப்பு முறைகள் 

முதல் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 8 முறை வரை சளி, இருமல், காய்ச்சல் வருவது இயல்பு. இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வளர்வதன் அறிகுறி. இருப்பினும், சில முக்கிய தடுப்பு முறைகளைக் கடைபிடிக்கலாம்…

  • வெளியிலிருந்து வந்ததும் கை கழுவுதல்
  • சுவாச நோய்த்தொற்று அதிகம் உள்ள காலங்களில் முககவசம் அணிதல்
  • குழந்தைகளுக்கான ப்ளூ வாக்சின், நியூமோகோக்கல் வாக்சின் போடுதல்
  • முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தல்
  • வெளி உணவுகளைத் தவிர்த்தல்

உங்கள் கவனத்துக்கு… 

இந்த வழிகாட்டுதல்கள் பொதுவான தகவலுக்காக மட்டுமே. உங்கள் குழந்தைக்கான குறிப்பிட்ட மருத்துவ ஆலோசனைக்கு எப்போதும் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகவும்.

நீர்ச்சத்தும் உணவும் 

காய்ச்சலின் போது, குழந்தையின் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறும் வாய்ப்பு அதிகம். எனவே, நிறைய நீர் கொடுப்பது மிக முக்கியம். ORS கரைசல் அல்லது இளநீர் கொடுக்கலாம்.

உணவு விஷயத்தில், ஆவியில் வேகப்பட்ட உணவுகள் சிறந்தவை. இட்லி, தோசை, உப்புமா, ஊத்தப்பம், ரசம் சாதம், தயிர் சாதம், அரிசிக் கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளையும், வெளி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பழச்சாறு கொடுப்பதைத் தவிர்த்து, பழங்களை நேரடியாகக் கொடுக்கலாம்.

5 வயது வரை குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 8 முறை வரை சளி, இருமல், காய்ச்சல் வருவது இயல்பு. இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வளர்வதன் அறிகுறி.

Dr. S. கார்த்திகேயன், MBBS, DCH., DNB
(குழந்தை நல மருத்துவம்), AASC., FAAP
குழந்தைகள் நுரையீரல் நோய் நிபுணர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801