உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, மகிழ்ச்சி என்றால் என்ன, அதை எவ்வாறு அடைவது, அது மனநலத்துடன் எப்படி தொடர்புடையது என்பதைப் பற்றி மனநல மருத்துவர் டாக்டர் யாமினி கண்ணப்பனுடன் உரையாடினோம். நிரந்தர மகிழ்ச்சியை அடைவதற்கான நடைமுறை வழிகளை இந்த நேர்காணலில் பகிர்கிறார்…
உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம், மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், நாம் அனைவரும் மகிழ்ச்சி என்ற உணர்வை எவ்வாறு அனுபவிக்கலாம் என்பதையும் நினைவூட்டுவதே ஆகும்.
பொதுவாக பிறந்தநாள் வாழ்த்து அல்லது புத்தாண்டு வாழ்த்து சொல்லும் போது ‘மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று கூறுவோம். வாழ்த்தும்போது மகிழ்ச்சி என்ற வார்த்தையை எளிதாக உபயோகிப்போம். ஆனால், அதனுடைய உண்மையான பொருள் நமக்குப் புரிந்திருக்கிறதா?
மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அனுபவிக்கிறார்கள். சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி சந்தோஷத்தைத் தருகிறது. சிலருக்குத் தாங்கள் செய்யும் வேலையை நேர்த்தியாகச் செய்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது. சிலருக்கு அவர்கள் வேலையில் முழுமையாக ஈடுபடும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. இப்படி ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
‘உண்மையான மகிழ்ச்சி எது?’ என்ற கேள்விக்கு பதில் தேடி அறிவியலாளர்கள், தத்துவஞானிகள் பலர் விவாதித்துள்ளனர். அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ முதல் தற்போதைய நரம்பியல் விஞ்ஞானிகள், மனநல ஆய்வாளர்கள் வரை பலரும் இதைப் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
மகிழ்ச்சியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்…
- Hedonic Happiness (இன்ப மகிழ்ச்சி): நம் மனதுக்குத் தற்காலிகமாக குதூகலம் தரும் அனுபவங்கள். எடுத்துக்காட்டாக, லாட்டரியில் பணம் வெல்வது, புதிய கார் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவை. இவை வெளிப்புற காரணிகளால் ஏற்படும் மகிழ்ச்சி.
- Eudaimonic Happiness (நிறைவான மகிழ்ச்சி): இது ஒரு நல்வாழ்வின் ஆழமான உணர்வு. நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது என்ற உணர்வை இது தருகிறது.
இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பலரும் ‘எனக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வதில் என்ன தவறு?’ என்று கேட்கிறார்கள். புகைபிடிப்பது, மது அருந்துவது, ஷாப்பிங் செய்வது, சாக்லேட் சாப்பிடுவது போன்றவை தற்காலிக இன்பத்தைத் தருகின்றன. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்காது.
பலரும் தற்காலிக இன்பம் தரும் விஷயங்களே நிரந்தர மகிழ்ச்சியைத் தரும் என தவறாக நினைக்கின்றனர். ஒரு மனநல ஆராய்ச்சியாளர் இதை ‘ஹெடோனிக் ட்ரெட்மில்’ என்று குறிப்பிடுகிறார் – நாம் ஒரு ட்ரெட்மில்லில் நடக்கிறோம். ஆனால், ஒரே இடத்தில்தான் இருக்கிறோம்.
‘எனக்கு ஒரு கார் வாங்கினால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், வீடு வாங்கினால் மகிழ்ச்சியாக இருப்பேன், பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என்று நினைக்கிறோம். இவை ஒவ்வொன்றும் அந்த நேரத்தில் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைக்கிறதா? இல்லை. சிறிது காலத்துக்குப் பிறகு, ‘இது எனக்கு இப்போது மகிழ்ச்சியைத் தரவில்லை, வேறு எதையாவது தேட வேண்டும்’ என்று நினைக்கத் தொடங்குகிறோம்.
பொதுவாக மகிழ்ச்சி மூன்று பரிமாணங்களைக் கொண்டது…
- இனிமையான அனுபவங்கள்
- திருப்திகரமான செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல்
- அர்த்தமுள்ள குறிக்கோளுக்காகச் செயல்படுதல் இந்த மூன்று பரிமாணங்களுமே நிறைவான, நிலையான மகிழ்ச்சிக்கு அடிப்படை.
ஒரு முக்கியமான விஷயம் – ‘மகிழ்ச்சி முரண்பாடு’ (Happiness Paradox). ‘நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால், அதை அடைவது கடினமாகிவிடும்.
மகிழ்ச்சி என்பது ஒரு குறிக்கோள் அல்ல, அது ஒரு பயணம்.
நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும்போது, உண்மையான மற்றும் நிலையான மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும்.
இன்றைய சூழலில், மக்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் மகிழ்ச்சி என்ன பங்கு வகிக்கிறது?
மகிழ்ச்சியாக இருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். நம் மன அழுத்தத்தைச் சமநிலையில் கையாளும்போது, மகிழ்ச்சியின் நிலையும் மேம்படுகிறது.
பலர் மன அழுத்தத்தை கையாள்வது என்றால் ‘எனக்கு எதிர்மறை உணர்வுகள் இருக்கக் கூடாது, நேர்மறை உணர்வுகள் மட்டுமே இருக்க வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், இது யதார்த்தமானது அல்ல. நமக்கு அதிக நேர்மறை உணர்வுகள் இருக்க வேண்டும் என்பது உண்மையே. அதே நேரம், எதிர்மறை உணர்வுகளும் நம் உயிர்வாழ்வுக்கு அவசியமானவை. கோபம், கவலை போன்ற உணர்வுகளை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதுதான் மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கியம்.
மகிழ்ச்சியை மற்றொரு கோணத்தில் பார்த்தால், அது ஒரு வகையான ‘மீள்திறன்’ (Resilience). வாழ்க்கையில் ஒரு சிக்கல் ஏற்படும்போது, அதை எவ்வளவு நேர்த்தியாகக் கையாள்கிறோம் மற்றும் அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீண்டு வருகிறோம் என்பதும் மகிழ்ச்சியின் ஓர் அங்கம்.
பலரும் ‘எல்லாம் சுமுகமாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படியல்ல. வாழ்க்கையில் சவால்கள் வந்து, அவற்றை சரியான முறையில் கையாண்டு, அதிலிருந்து விரைவாக மீள்வதும் மகிழ்ச்சியின் ஒரு பகுதியே.
மகிழ்ச்சி என்பது எதிர்மறையான விஷயங்களைத் தவிர்ப்பது அல்ல; மாறாக, அவற்றை சிறப்பாகக் கையாள்வதாகும். தினசரி சவால்களையும் மன அழுத்தத்தையும் சமாளிப்பதும் மகிழ்ச்சியின் ஓர் அம்சமே!
மகிழ்ச்சிக்கான பாதை!
நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற பின்பற்றக்கூடிய ஐந்து எளிய படிகள்:
- தினமும் நன்றி சொல்லுங்கள் – சிறிய விஷயங்களுக்கும் கூட!
- ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடல் ரீதியாகச் செயலில் இருங்கள்
- உங்களுக்கு முக்கியமான மக்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள்
- நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள் – கடந்த காலம் அல்லது எதிர்காலத்தில் மனதை அலைய விடாதீர்கள்
- மற்றவர்களுக்கு உதவுங்கள் – உதவி செய்வது நமக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது
Dr. யாமினி கண்ணப்பன்
MBBS, Diploma in Psychological Medicine, DNB (Psychiatry)மனநல மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னை-ஆழ்வார்பேட்டை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ஹெடோனிக் மகிழ்ச்சி மற்றும் நிறைவான மகிழ்ச்சியின் வித்தியாசம் என்ன?
ஹெடோனிக் மகிழ்ச்சி தற்காலிக இன்பங்களால் ஏற்படுவது (எ.கா: புதிய பொருட்கள் வாங்குதல்), அதேநேரம் நிறைவான மகிழ்ச்சி வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் குறிக்கோள்களிலிருந்து வரும் ஆழமான நிலைப்புத் தன்மை கொண்டது.
மனஅழுத்தத்தை எவ்வாறு நிர்வகித்து மகிழ்ச்சியை அதிகரிப்பது?
எதிர்மறை உணர்வுகளைத் தவிர்ப்பதை விட, அவற்றை சரியாகக் கையாள்வதே முக்கியம். தியானம், உடற்பயிற்சி மற்றும் நன்றி பதிவுகள் போன்ற முறைகள் உதவுகின்றன.
நிரந்தர மகிழ்ச்சிக்கான எளிய தினசரி படிகள் யாவை?
நன்றி சொல்லுதல், உடல் செயல்பாடுகள், அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுதல், நிகழ்காலத்தில் வாழ்தல் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற 5 படிகள் முக்கியம்.
மகிழ்ச்சி முரண்பாடு” (Happiness Paradox) என்றால் என்ன?
மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால், அது அடைய கடினமாகும். மாறாக, அர்த்தமுள்ள செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்போது மகிழ்ச்சி தானாகவே வரும்.
நன்றி சொல்வது மகிழ்ச்சியை எவ்வாறு பெருக்கும்?
சிறிய விஷயங்களுக்கு நன்றி செலுத்துவது நேர்மறை மனநிலையை வளர்க்கிறது, இது மகிழ்ச்சியின் அடிப்படைக் கூறு.
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801